Wednesday, October 20, 2010

ஆதி - கோடி கோடியாய், முடிவில்லாமல்

எனக்கு அதை சொல்லத் தெரியவில்லை.

மல்லிகை, முல்லை, அல்லி …. என வெவ்வேறு பூக்களாய்ப் பூத்ததாக தெரியவில்லை. அத்தனையும் தாமரையாய் இருந்தன.

பூத்தன பூத்தன புவனம் பதின்நான்கயும் தாண்டிப் பூத்தன. முதலில் ஆயிரம் கோடி பூத்தன, பின்னர் கோடியின் கோடியாய் பூத்தன. முடிவில்லாமல் பூத்தன, முடிவிலியிலும் பூத்தன.


இறுதியில், இறுதியில்லாமல் பூத்துக்கொண்டே இருந்தன.

அனைத்தும் எனக்காய், எனக்குள்.
எனக்குள்ளா? ஆம், நான் அண்ட சராசரங்களையும் தாண்டி அளவற்றவனாக அல்லவா இருந்தேன்.


மீண்டும் நான் அதை ஒத்துக் கொள்கிறேன், எனக்கு அதை சொல்லத் தெரியவில்லை.
மொட்டு: அழகு, பூ: அழகு – அதிலும் பூத்தல்: மொட்டிருந்து பூவாதல் மிக மிக அழகு. முடிந்தால் அதிகாலையில் எழுந்து ‘ஒரு பூ’ பூப்பதைப் பாருங்கள். அதுவே அத்தனை அழகானால், அத்தனை அத்தனை பூக்கள் என் முன்னே ஒரே முறையில் பூத்துக்கொண்டால் எத்தனை எத்தனை அழகாய் இருக்கும். வர்ணிக்கவா முடியும்? கற்பனையாய்க்கூட பார்த்ததில்லை: காட்சியாகவே கண்டு கொண்டேன்.

இசை கேட்டதா? இல்லையா? என்னிடம் பதிலில்லை. மரகத வீணை செய்யும் இசை கேட்டதா? புல்லாங்குழலில் ஒலி கேட்டதா? ஆனால் இசைத்தது என்பேன்,  ஏனெனில் இசைக்காமல் இருப்பதுவும் இசையின் ஓர் அங்கம்தான்.

மொட்டாக இருக்கும் போது இதழ்கள் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டுதானே இருக்கும். சட்டென விரியாவிட்டாலும், அவை விட்டுக்கொள்ளும் போது ஓரு சத்தம் கேட்கத்தான் செய்யும். மௌனங்கள் மொழியாகும் போது ஏன் மலர்தல் இசையாகக்கூடாது, பூக்களின் தொடர்ச்சியான மலர்வுகளின் ஒலி ஏன் ஓர் தொகுக்கப்பட்ட இசைவடிவாக இருக்கக்கூடாது: ஆகவே இசையும் இருந்ததென்பேன்.

தாமரை பூப்பதென்னவோ சூரியனைக் கண்டுதானாம். அத்தனை தாமரைகள் பூக்க எங்கிருந்தான் அந்த சூரியன்? நானா?

சட்டெனப் பார்க்கையில் ஏதோ நெளிகிறது. ஆம் நான் உட்காந்திருந்த பாயின் கீழே.
நான் சுதாரித்துக்கொண்ட மறுகணமே அது நிறுத்திக்கொண்டது. வழக்கமாக எனக்கிருக்கும் பயம் அன்றிருக்கவில்லை. இருந்தாலும் அந்த அதிகாலை ஐந்து மணிக்கு, ‘என் கட்டிலில் பாம்பு’ எனக்கூவி யாரை அழைப்பது.

எழுந்து நின்றேன், விழித்துக்கொண்டதாக நினைத்துக் கொண்டேன். யன்னலூடாக வெளியே எட்டிப்பார்க்கிறேன். எதிரேயிருக்கும் தொடர்மாடிக் கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் அன்றைய கடமைகளைச் செய்வதற்காக எழுந்துகொண்டிருப்பதை, அவ்வப்போது எரியத்தொடங்கிய அறை விளக்குகள் சொல்லிக் கொண்டிருந்தன. ஓரு பக்கம் திரும்பினால், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பாதைகள் வெளிச்ச நெரிசலில் காணப்பட்டதும், மறுபக்கம் பெற்றோனாஸ் இரட்டைக் கோபுரங்களுக்காக அமைக்கப்பட்ட ஒளி வீச்சுக்கள் மருவி வழமைபோல முகிலுக்குப் பட்டுக்கொண்டிருந்ததும் பார்க்க அழகாயிருந்தன.

நான் மீண்டும் கட்டிலுக்கு வந்து வடக்குப்பக்கமாக திரும்பி, முன்னைநாட்களைப் போலவே பாய் மீது அமர்ந்து கொண்டேன்.

நிமிர்ந்திருந்தேன்

கண்களை மூடிக்கொண்டேன்

மௌனம்
..

தாமரைகள்

மலர்வுகள்

கோடி கோடியாய், முடிவில்லாமல்…

மீண்டும் அது நெளிவதை நான் உணர்ந்து கொண்டேன்.
சட்டென என் பாயினைத்திருப்பி அதன் கீழே பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போலவே அது – அங்கு இல்லை.

மீண்டும் நான் இருக்க..

கண்களை மூடிக்கொள்ள..

மௌனம்
..

தாமரைகளின் மலர்வுகள்

கோடி கோடியாய், முடிவில்லாமல்..

இம்முறை அதன் நெளிதலை நான் உணர்ந்ததாக காட்டிக்கொள்ளவில்லை. யார் யாரை ஏமாற்றுவது என்றே தெரியவில்லை, தெரிந்தே ஏமாற்றுப்படுவதைப் போல் நடந்து கொண்டோம்: இருவரும்.

அதன் நெளிதலினால் நான் சிலமுறை அசைக்கப்பட்டாலும், ஓரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொண்டேன். அதாவது அது – பாம்புக்கு பெயர் ஒன்றை வைத்து விட்டால் சொல்வது இலகுவாக இருக்கும் ம்.. ‘ஆதி’ என்று வைத்துக்கொள்வோமே – ஆதி, தான் இருக்கும் முறைமையை என் உடலுக்கேற்ப மாற்றிக்கொண்டு எனக்கு இதமான மெத்தையாகவே மாறியிருந்தது. இலவம் பஞ்சைப்போல ஆதி இதமாய் இருந்தது என்பதா, இல்லை நான் இருக்கவே இல்லை மிதந்துகொண்டிருந்தேன் என்பதா. அம்மன் கோவில்களில் இருக்கும் பாம்பு வாகன அமைப்பில் ஆதி என்னை இதமாக துக்கி தன்மடியில் வைத்துக்கொண்டிருந்தது.

பூக்கள் இன்னமும் பூத்துக்கொண்டேயிருந்தன.

நான் குழந்தை முதல் சிறுவனாக இருந்த காலங்களில் என் நெற்றியில் பூசப்பட்ட திருநீற்றுப் பட்டை சட்டென்று பல்லிளிக்குமாம். அவர்கள் பேசிக்கொண்டதென்வோ என் நிறத்தைப் பற்றியதாக இருந்;தாலும், நான் அது திருநீற்றின் மகிமை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆதியும் நானும் அருகருகே இருக்கையில், நான் வெள்ளயனோ எனத்தோன்றும் வண்ணம் இருந்தது ஆதி – கறுப்பாய்.

நான் ஆதியைப் பார்க்க எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும், ஆதி சட்டென ஒளிந்துகொள்ளும். ஆனா என் முகத்தைப் பார்க்க துடிக்கும் தவிப்பினை அதன் பத்துக் கண்களிலும் நான் பார்த்திருக்கிறேன். ஆம் ஆதிக்கு ஐந்து தலைகள்.

பூக்கள் இன்னமும் பூத்துக்கொண்டேயிருக்கின்றன.

தொடரும்.

No comments:

Post a Comment

இன்னும்